உப்புமா என்ற பெயரை கேட்டாலே, பலருக்கு எரிச்சல் தான் வரும்! இதை எல்லாம் யாரு கண்டுபிடிச்சா என்று எரிச்சல் படாதவர்களே கிடையாது! நானும், சில வருடம் முன்பு வரை, இந்த உப்புமாவை விரும்பி உண்டதில்லை! ஆனால், இப்பொழுது, அது எனக்கு பிடித்தமான உணவு வகைகளில் ஒன்று!
என்னது உப்புமா உன்னோட Favourite aah nu மயங்கி விழுந்துடீங்களா, Relax, அது ஒரு பெரிய கதை இல்லை, ஒரு சின்ன Flashback கதைதான்! எனக்கு கல்யாணம் ஆன புதிதில், எனக்கும், என் கணவருக்கும், முதன்முதலில் சண்டை வர காரணமாக இருந்தது இந்த உப்புமா! எனக்கு சமையல், அந்த சமயத்தில் அவ்வளவாக தெரியாது! என் கணவருக்கு, புதிது புதிதாக சமையல் செய்து, செய்து என்னை நானே பழக்கி கொண்டிருந்தேன்! எவ்வளவு நாள்தான் என் சமையலை பிடித்த மாதிரியே நடிப்பது, என்னை பழி வாங்க அவர் தேர்ந்தெடுத்த ஆயுதம் தான் இந்த உப்புமா!
ஒரு நாள் என்னை அழைத்து கேட்டார், ‘ உப்புமா செய்ய தெரியுமா?’ ‘ஓ! நல்லா தெரியும்’, ‘அப்போ இன்னிக்கு அதையே செஞ்சிடு’னு சொன்னார்! ‘OK , அது என்ன பிரமாதம்’ நு, நானும் ரவையை சிறிது வறுத்து, அதை தனியாக எடுத்து வைத்தேன்! பின்பு, சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளித்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை நன்கு வதக்கி, ரவைக்கு இரண்டு பாகம் தண்ணீர் விட்டு, அது கொதித்த உடன், சிறிது உப்பு போட்டு,ரவையை சிறிது சிறிதாக போட்டு, மிதமான தீயில், ரவையில் கட்டி விழாமல், கிளறி முடித்தேன்! அதற்கு பொருத்தமாக சாம்பாரையும் செய்து, ஆசையோடு, என் கணவரிடம் தட்டை நீட்டினால், ‘இது என்ன உப்புமா கேட்டா களி குடுக்கர’, என்று முறைத்தார்!
‘நீயே சாப்பிடு’ நு சொல்லிட்டு அவர் வேலையில் மூழ்கினார்! என் கணவரின், முதல் கோப முகம், நான் முதன் முதலில் செஞ்ச உப்புமாவை களி என்று சொன்னது, நான் ஆசையொடு செய்த உப்புமாவை அவர் சாப்பிடாமல் தவிர்த்தது என்று எல்லாம் சேர்த்து என்னை அழ, அழ செய்தது! அழுகையோட சேர்த்து கோபமும் பொத்து கொண்டு வந்தது!
‘Afterall ஒரு உப்புமா, இதுக்காக ஒரு சண்டையா! எங்க ஊரில் எல்லாம் உப்புமா இப்படிதான் செய்வார்கள்’, என்று கூறினேன்! என் கணவரும் விட வில்லை, ‘நான் என்ன உங்க அப்பாவா, நீ என்ன சமைத்தாலும் நல்லா இருக்குனு சொல்ல’, என்று எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றினார்! ‘நல்லா உப்புமா செய்யிர பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிங்கோங்க’,னு என் பங்குக்கு நானும் வார்த்தைகளை வீசினேன்! ‘இந்த வில்லனை எங்கப்பா பிடிச்சீங்கனு’ என் அப்பாவை மனதினுள் திட்டினேன்!
என்ன இருந்தாலும், புது பெண் இல்லையா, சண்டையை பெரிது படுத்த விரும்பாமல், எள்ளும் கொள்ளும், முகத்தில் வெடிக்க, எரிச்சலோடு உப்புமாவை விழுங்கி முடித்தார்! ‘அடுத்த தடவை உப்புமாவை நான் செய்யரேன், வெங்காயம் மட்டும் வெட்டி வை ‘,நு சொன்னார்! அந்த நாளும் வந்தது, எனக்கோ, பயங்கர ஆவல், எப்படி உப்புமா செய்யரார்னு பாத்துடலாம்! யார் செஞ்சா என்ன, உப்புமா, உப்புமா மாதிரி தான வரும்! அவருக்கு மட்டும் என்ன ஸ்பெசலாவா வந்துடபோது!!
ஆரம்பித்தார், தன் நள பாகத்தை, எனக்கோ உள்ளுக்குள் ஒரு நமுட்டு சிரிப்பு! ரவையை வறுக்கவே இல்லை அவர்! ஒரு கரண்டி எண்ணெய், ஒரு கரண்டி நெய் விட்டு, அவை காய்ந்த உடன், வெங்காயம், பச்சை மிளகாய், வெட்டி வைத்த ஒரு தக்காளி எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு, நல்ல தீயில் மின்னல் வேகத்தில் வதக்கினார்! நொடியில் தக்காளி மறைந்து போயிற்று! பின்பு, ரவையின் பங்குக்கு, ஒரு மடங்குக்கும், சற்றே குறைவான தண்ணீரை ஊற்றி, அது கொதிக்க ஆரம்பித்தவுடன்,சிறிது உப்பு போட்டு, முழு தீயில், ரவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு அவசர கதியில் கிளறி முடித்தார்! ஒரு கரண்டி சீனியும் கொதிக்கும் தண்ணீரில் வேண்டும் என்றால் போட்டு கொள்ளலாம்!
ரவை உப்புமா, பார்க்கவே அழகாக இருந்தது! தக்காளி தன் நிறத்தை சற்றே உப்புமாவுக்கு கொடுத்திருந்தது! ரவை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், மணல் போல அழகாக வெந்து இருந்தது! ஒன்றும் தொட்டு கொள்ளாமலே, சாப்பிட மிக அருமையாக இருந்தது! உப்புமா கூட இவ்வளவு சூப்பரா செய்ய முடியுமா, என்னோட வில்லன் இப்போ ஹீரோவா தெரிந்தார்!!!