நமக்கு இந்த ஸ்வீட் எல்லாம்
ஆகவே ஆகாது என்று அதை
வாங்கி வந்தவரை அட்வைஸ்
செய்யாமல் விட்டதும் இல்லை
அதன் பின்னே வாங்கி வந்த
ஸ்வீட்டை ஒரு பிடி பிடிக்காமல்
விட்டதும் இல்லை!!
செல்லரித்த ஏடுகளும்
புல்லரிக்க வைக்கும்…
பல் போன வயதினரின்
பால்ய வயது புகைப்படங்கள்!
பார்வை ஒன்று போதும்
சோர்வடைந்து விடாது
கோர்வையாய் கவிதைகள் கிறுக்க!
அதிகாலை சூரியனை சுட்டி காட்டி
‘சூரிய’ என்று தமிழில் உரைத்த
என் குட்டிப் பையனை கண்டு வியந்து
பெருமிதம் கொள்ள மாட்டாது இறக்கைகள்
இல்லாமலேயே உயரே உயரே பறந்த
என்னை ஒரே நொடியில் தரை இறக்கினான்
‘காந்தி ‘என்று அடுத்த வார்த்தையை உதிர்த்து!!
தூரத்தில் தெரிந்த வெளிச்சம்
நோக்கி நடந்தேன் உயிர் மீண்டு
வந்தேன் என்று ‘கோமா’வில்
இருந்து நினைவு திரும்பியவர்
சொல்ல கேட்டதுண்டு..
தூரத்தில் தெரிந்த வெளிச்சத்தின்
மேல் கொண்ட’மோக’த்தில் அதை நோக்கி
பறந்து செல்லும் விட்டில் பூச்சிகள்
மட்டும் உயிர் மாண்டு போவது ஏனோ??
அம்மா : Animals தமிழில் என்னவென்று சொல்லுவாய்
பையன் : பசுக்கள்.. மாடுகள்!!
அம்மா : தப்பு.. தப்பு
பையன்: Clue ஏதாவது குடுங்க
அம்மா : திருடனை பிடித்தவுடன் அவன் கையில என்ன மாட்டுவாங்க?
பையன்: watch.. chain.. மோதிரம்!!!
அம்மா: டேய்.. திருடன் என்ன மாப்பிள்ளையா ??
பையன் :அடுத்த clue?
அம்மா : ‘வி ‘ என்ற எழுத்தில் தொடங்கும்..
பையன் : Got it.. விலங்குகள்
கனியுண்டு காயுண்டு வாழ்பவர்க்கு
நோயின்றி வாழ இறைவனின்
கனிவுண்டு காயாத வாழ்வுண்டு!!
ஒருவற்கு யாதேனும் ஒரு விஷயம்
‘பிடி’த்திருக்கிறதா இல்லை பிடிக்கவில்லையா
என்பதனை அவ்விஷயங்கள் சார்ந்த
உரையாடல்களின் போது அவர் ‘பிடி’
கொடுத்து பேசுகிறாரா என்பதனை
பொறுத்து கண்டு ‘பிடி’த்து விடலாம்!