குறுகுறுபார்வை முதன் முதலாய் என் மேல் பதிந்த அந்த நொடி தரிசாய் கிடந்த என் மனமாகிய நிலத்தில் திமிர் முளை
விட்டது! இது அகந்தையினால் வந்த திமிர் அல்ல.. நானும் இவ்வுலகத்தில் யாரோ ஒருவரால் கவனிக்க படுகிறோம் என்ற
நினைப்பால் வந்த திமிர்! என்ன தான் அச்சம், மடம், நாணம்.. நீ முந்தி,நான் முந்தி என்று விழுந்தடித்து ஓடி வந்தாலும் எதுவுமே
நடக்காதது போல் முகத்தில் உணர்ச்சியை காட்ட வைத்த திமிர்.
நடை,உடை பாவனை மாற்றியது! ஒவ்வொரு குறுகுறு பார்வைக்கும், திமிராகிய செடி புது
புது இலைகளை விட்டு நெடு நெடுவென வளர்ந்து கொண்டே தான் வந்தது. உடைகளை தேர்ந்தெடுப்பதில் அதிக
முக்கியத்துவம் காட்டியது! யாருடைய கவனத்தையும் திருப்பாத வண்ணம் உடை உடுத்த பழகி கொண்டது! நிமிர்ந்த நடையும்
நேர் கொண்ட பார்வையும் பார்க்க வைத்தது! எந்த புதியவரிடத்திலும் கண்ணை பார்த்து பேச பழக்கியது! தவறு செய்பவர்களை
தைரியமாக சுட்டி காட்ட மனதில் தைரியம் முளைத்தது!பிடித்தவர்களிடம் நட்பு வளர்த்து கொண்டது!புறம் பேசுபவர்களை
ஒதுக்கி தள்ளியது. தன்னம்பிக்கையும் கனிகளாய் காய்த்து குலுங்கவைத்தது!
இப்படியாக வளர்ந்த வந்த திமிராகிய செடி இன்று மரமாக தழைத்து நின்று கொண்டிருக்கிறது. என் வாழ்க்கை துணைவர்
என்னை தன் உற்ற தோழியாய் நினைக்க தோன்றியது கூட இந்த திமிர் திமிர் திமிரால் தான்!! சில சமயங்களில் இதே குறுகுறு
பார்வைகள் என்னை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்ததுண்டு! கணவருடன் ஒரு பனி கால இரவில் பைக்கில் வெளியில் சென்று
வரும் போது ஒரு நபர் எங்களை பின் தொடர்ந்தார் அவருடைய ஓட்ட ஸ்கூட்டரில்! நாங்க மெதுவாக சென்றால் அவரும்
மெதுவாக, வேகமாக சென்றால் அவரும் வேகமாக.. பார்க்க முதியவர் போல இருதாலும், அவருடைய குறுகுறு பார்வை சிறிது
எரிச்சலூட்டியது. கணவரிடம் சொல்லவா வேண்டாம ஒரே குழப்பம்!அவரிடம் சொன்னால் சிரிப்பார், உனக்கு ரொம்பதான்
நினைப்பு என்று! தைரியம் வந்தவளாய் அந்த நபரை உற்று நோக்கினேன்! என் மடியில் இருந்த என் கைபைய்யையும் என்
முகத்தையும் உற்று உற்று நோக்கினார். நிச்சயமாக இவர் திருடன் தான் மனம் எச்சரித்தது.. சுதாரித்து கொண்டேன்.
ஏதேச்சையாக சிக்னலில் நிற்க வேண்டிய கட்டாயம். அவரும் அருகில் வந்து நின்று திரும்பவும் அதே குறு குறு பார்வையுடன்
உற்று நோக்கினார்!! பிறகு தான் புரிந்தது அவர் நான் பந்தாய் சுத்தி வைத்திருந்த ராமர்பச்சை மற்றும் பஞ்சு மிட்டாய் கலரில்
வாங்கிய கொசு வலையை தான் என்னவோ ஏதோ என்று உற்று நோக்கி இருக்கிரார் என்று! அதை பார்த்து தெரிந்து
கொண்டவுடன் எதோ பெரிதாய் கண்டுபிடித்து விட்ட திருப்தியில் தன் வழியே சென்றார்!!
இதே குறுகுறு பார்வையால், என் மனதில் வளர்ந்த திமிர் மரத்தின் கிளைகளை சற்றே
வெட்டி சீர்படுத்திய தருணங்களும் உண்டு! எனக்கு எந்த வேலையையும் காலையிலேயே முடித்து விட வேண்டும் என்ற
நினைப்பு இருக்கும்.ஒரு மாதத்துக்கு தேவையான பலசரக்கை வாங்குவதற்கு நாங்கள் இருந்த ஊரில் உள்ள சூப்பர் மார்கட்
செல்வதுண்டு.. ஒரு நாலைந்து தடவை கவனித்து விட்டேன், அந்த கடையில் வேலை பார்க்கும் என் வயதை விட மிக
கம்மியான வயது உடைய இளைஞன் என் பின்னரே வருவதுண்டு! நான் நின்றால் அவனும் நிற்பான், திரும்பி பார்த்தால்
வேலை பார்ப்பது போல் பாவனை செய்வான்!
அவன் செய்கைகள் சிறிது எரிச்சலை கிளப்பி விடும். நானும் அவனை எத்தனையோ முறை தம்பி
என்று விளித்து சில பொருட்களின் விபரம் கேட்டதுண்டு! அவனோ நீ என்ன வேண்டுமானாலும் கூப்பிட்டு கொள் என் வேலை
உன் பின் வருவது மட்டுமே என்பது போல் நடந்து கொள்வான்! ஒரு முறை எரிச்சல் முத்தி போய் என் கணவரிடம் இந்த
விஷயத்தை சொன்னேன்!
இந்த வயதில் கூடவா பின்னாலையே வருவாங்க என்ற வார்த்தைகளில் அதே திமிரும் கலந்திருந்தது..
அவரோ வாய் விட்டு சிரித்து விட்டு சொன்னார், நீ கடை திறந்து சிறிது நேரத்திலேயே போய் நின்றால், இந்த பெண்மணி வாங்க
வந்துஇருக்கிராரா இல்லை லவட்டி கொண்டு போக வந்து இருக்கிராரா என்ற சந்தேகம் கடைகாரனுக்கு வந்திருக்கும், அதற்காக
தான் அந்த இளைஞன் உன் பின் வந்திருக்கலாம் என்று ஒரு போடு போட்டு விட்டு நமுட்டு சிரிப்பு சிரித்தார்!!!